வவுனியா வைரவபுளியங்குளம் சந்தியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களிற்குள் நேற்றைய தினம்(சனிக்கிழமை) உள்நுளைந்த திருடர்கள் அங்கிருந்து பணத்தையும் பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
நேற்றைய தினம் இரவு வியாபார நிலையங்களை மூடிவிட்டு சென்ற அதன் உரிமையாளர்கள் இன்று காலை மீண்டும் அதனை திறக்க முற்பட்ட போது கதவினை உடைத்து பொருட்கள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்தது.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற குற்றத்தடுப்பு பொலிசார் சீ சி ரீ வி வீடியோ உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் தொடர்பாடல் நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் பணமும், தொலைபேசி அட்டைகளும் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் பொலிசாரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
அத்துடன் அதற்கு அருகாமையில் இருந்த வர்ணப்பூச்சு விற்பனை நிலையம் ஒன்றை உடைத்த திருடர்கள் அங்கிருந்து பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
இதேவேளை அதே பகுதியில் அமைந்திருந்த மற்றொரு வியாபார நிலையத்தின் (சலூன்) கதவும் உடைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் பொருட்கள் எவையும் திருடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.