அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க காரியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை இனந் தெரியாதோரால் உடைக்கப்பட்டு அதில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம் பெற்றுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி செல்வராணி தெரிவித்தார்.
தம்பிலுவில் மத்திய சந்தை கட்டிடத்தில் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் காரியாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த பெயர் பதாதையை இனந் தெரியாதவர்களால் நேற்று புதன்கிமை இரவு அதனை அடித்து உடைத்து கீழ் வீழ்த்தி அதனை குத்தி கிழித்து அதில் ஒரு துண்டுபிரசுரத்தை ஒட்டிவைத்துவிட்டு சென்றுள்ளனர்.
இதே போலத்தான்டி உனக்கும் செய்வோம் கருணா நலன் விரும்பிகள் என அத்துண்டு பிரசுரத்தில் எழுதப்பட்டு உள்ளது. இது ஒரு அடாவடித்தனம். இன்று தொலைத்துவிட்டு தேடுவது எங்களது உறவுகளை நாங்கள் எவருக்கும் எதுவும் செய்யவில்லை யாருடனும் எதுவித பிரச்சனைக்கும் செல்லவில்லை
நாங்கள் எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலை தெரியவேண்டும் எனதான் இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தை வைத்து போராடி வருகின்றோம்.
இதனை செய்தவர்கள் யார் என எங்களுக்கு தெரியாது இதனை செய்தவர்கள் யார் என விரைவில் கண்டுபிடிப்போம் இதேவேளை இது தொடர்பாக ஜ.நா. சபைக்கும். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம். மனித உரிமை ஆணையகம். திருக்கோவில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக அறிவித்திருக்கின்றோம்
உண்மையில் இப்படிச் செய்தவர்கள் எனக்கு என்ன நடந்தால் யாரிடமும் கேட்க முடியாது என்பதுடன் இந்த செயற்பாட்டையிட்டு நாங்கள் கவலையடைகின்றோம் .
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இந்த மாதம் 30 ம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் போராட்டம் நடக்கவிருக்கும் தருவாயில் இந்த வேலையை ஏன் செய்தார்கள் என தெரியவில்லை . இதனை யார் செய்தாலும் எங்களது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலை தெரியும் வரை போராட்டம் தொடரும். இப்போது எங்களது உயிருக்கு யார் உத்தரவாதம் இப்போது எங்களுக்கு அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது
இது தொடர்பாக திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .