இந்திய இழுவைப்படகு அச்சுறுத்தல் தொடர்பில் இதுவரை எனக்கு யாரும் தெரிவிக்கவில்லை என கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிளிநொச்சி, இரணைதீவு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் இந்திய இழுவைப்படகுகளின் வருகை அதிகரித்துள்ளதாகவு்ம, இந்த அரசின் காலத்தில் மீண்டும் இவ்வாறான பிரச்சினை எழுந்துள்ளதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த பிரச்சினைக்கு துறைசார்ந்த அமைச்சர் என்ற வகையில் தீர்வை பெற்றுக்கொடுப்பீர்களா என அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்
அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
இவ்விடயம் தொடர்பில் எனக்க தெரியாது. ஆனாலும் இந்திய இழுவைப்படகு பிரச்சினை என்பது இரணைதீவிற்கு மாத்திரமல்ல வடக்க மாகாணத்திற்கே பெரும் சவாலாக காணப்படுகின்றது.
இந்த நிலையில் இந்திய அரசுடன் தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்றோம். வடக்கில் அச்சுறுத்தலாக காணப்படும் இந்திய இழுவைப்படகினை எல்லை பகுதிக்குள் அனுமதிக்காதவாறு தடுப்பதற்கான உறுதிப்பாட்டினை அரசாங்கம் வழங்கியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் விரைவில் இரணைதீவு பகுதிக்கு செல்வோம். அப்போது குறித்த விடயம் தொடர்பில் விரிவாக கவனம் செலுத்துவோம். இந்திய இழுவைப்படகு அச்சுறுத்தல் தொடர்பில் விரைவில் தீர்வு எட்டப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.