6 ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல்களை கட்டாயமாக்க தீர்மானம்
பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல்களை கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி மறுசீரமைப்பு மற்றும் தொலைதூரக்கல்வி தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி உபாலி சேதர குறிப்பிட்டார்.
இதனூடாக பாடசாலை கல்வியை பெறும் போதே தொழில்துறைக்கான பயிற்சியில் மாணவர்களை ஈடுபடுத்த முடியும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பாடசாலைகளில் ஆலோசனை முறையை கட்டாயமாக்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மாணவர்களிடையே காணப்படக்கூடிய உளநல மற்றும் சமூக சிக்கல்களுக்கு இதனூடாக தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தரம் ஒன்பதில் சித்திபெறும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயக் கல்வியை பூர்த்தி செய்தமைக்கான சான்றிதழை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி மறுசீரமைப்பு மற்றும் தொலைதூரக்கல்வி தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி உபாலி சேதர குறிப்பிட்டார்.