காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் ஒரு மணிநேர கதவடைப்புக்கு வேண்டுகோள்

Pressmeet 4
Pressmeet 4

எதிர்வரும் 30ம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், குறித்த போராட்டம் இடம்பெறும் நேரத்தில் ஒரு மணிநேர கதவடைப்பு செய்து தமது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே குறித்த அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த எமது தாய்மார் இலங்கை அரசின் மீது நம்பிக்கை இழந்து நிற்கின்றனர். எமது பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்று அறியாதவர்களால் பல தாய்மார் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் இலங்கை அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ளோம் அதனாலேயே நாங்கள் சர்வதேசத்தை நம்பியுள்ளோம். சர்வதேசமே இலங்கை அரசின் மீது விசாரணை மேற்கொண்டு எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும்.
நாம் அழுவதற்கு கூட கண்ணீர் இல்லை. நாளும் பொழுதும் அழுது கண்ணீர் இல்லாது போய்விட்டது. எமது வேதனைகளிற்கும் வலிகளிற்கும் சர்வதேசம் தலையீடு செய்து எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும்.

சர்வதேசத்திடம் நீதி கேட்பதற்காக எதிர்வரும் 30ம் திகதி வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறித்த போராட்டங்கள் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் திருகோணமலையிலும் இடம்பெறவுள்ளது. குறித்த போராட்டங்களிற்கு வலு சேர்க்கும் வகையில் வர்த்தகர்கள், பொது அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக காலை 9.30 மணிக்கு பேரணி ஆரம்பமாகி பேருந்து நிலையம் வரை சென்று முடிவடைய உள்ளது. குறித்த நேரத்தில் ஒரு மணிநேரம் வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி தமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அழைக்கின்றோம் என குறித்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது