குறைத்து சிங்களவர்களை மதிப்பிட்டவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்: சரத்பொன்சேகா!

“சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் கடந்த காலங்களில் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை சி.வி.விக்னேஸ்வரன் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தரப்பிலிருந்து 9ஆவது நாடாளுமன்றின் முதலாவது சபை அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மொழி தொடர்பாக முன்வைத்த கருத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட சரத் பொன்சேகா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனும் கடந்த காலத்தில் சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் எதிர்கொண்ட விளைவுகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும்.

சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் கடந்த காலத்தில் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை விக்னேஸ்வரன் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அதாவது, நாட்டை பிளவுபடுத்தி தனிநாட்டை உருவாக்க முயன்ற விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும் அதே நிலைமைதான் ஏற்பட்டது.

அந்தவகையில், ஒருபோதும் விக்னேஸ்வரன் பிரபாகரன் ஆகமுடியாது. அவருக்கு அதற்கான காலமும் இல்லை வயதும் இல்லை.

நாட்டிலுள்ள சிங்களவர்களின் நிலையை குறைத்து மதிப்பிடவேண்டாம் மேலும் உங்களிடம் உள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடையுங்கள். நிச்சயம் நீங்கள் அவ்வாறு குறைத்து மதிப்பிட்டால் மோசமான விளைவுகளை எதிர்கொள்வீர்கள்” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.