நெல்லியடியில் கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர் உயிருடன்தான் உள்ளார் என்று ஊரவர்கள் முரண்பட்டதால் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது .
இந்த சம்பம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ,
நெல்லியடி நகரிலுள்ள வர்த்தக நிலையங்களின் பொருட்கள் சுமக்கும் தொழிலாளியான நாகராசா நரேஸ் என்னும் 26 வயதுடைய இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார் .
குறித்த நபர் தொழிலில் ஈடுபட்டிருந்த போது, திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் உடனடியாக மந்திகை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியின் மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் .
வைத்தியசாலை அனுமதிப்பிரிவு மருத்துவர் அவர் ஏற்கனவே
இறந்து விட்டதாக அறிக்கையிட்டுள்ளர். இந்த நிலையில் உயிரிழந்தவரின் உறவினர்கள் சடலத்தைப் பார்வையிட்டு அவர் உயிருடன் தான் உள்ளார் என்று தெரிவித்து சடலத்தை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்று சிகிச்சையளிக்குமாறு கூறியுள்ளனர் .
இதனை மருத்துவர்கள் ஏற்றுக்கொண்டு மீண்டும் பரிசோதித்து நபரின் உயிரிழப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும் உறவினர்கள் மருத்துவ சேவையாளர்களுடன் முரண்பட்டதால் வைத்தியசாலையில் குழப்பநிலை ஏற்பட்டதை தொடர்ந்து காவல் துறையினால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என மந்திகை ஆதார வைத்தியசாலையின் மருத்துவர் கமலநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .