வவுனியா நகர சபையின் சுகாதார ஊழியர்கள் பலர் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து புதிய அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிப் புறக்கணிப்பு தொடர்பில் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் இன்று (10) காலை 9.30 ற்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
குறிப்பிட்ட சிலரே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் ஏனையோர் தமது கடமைகளை தடையின்றி மேற்கொள்வதாகவும் இந்த போராட்டத்தினால் திண்ம கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்ததுடன் போராட்டம் தொடரும் பட்சத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பணிச்சுமையை குறைப்பதற்கான மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த புதிய அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் உப தலைவர், தாம் மூன்று அம்ச கோரிக்கைகளான உள்ளக வெற்றிடம் நிரப்ப வேண்டும், சம்பளம் மீளாய்வு செய்ய வேண்டும், நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் எதுவுமே எமக்கு கிடைக்காத பட்சத்தில் இப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் நகரசபை செயலாளர் தம்மிடம் சமாதான பேச்சுக்களில் ஈடுபட்டு தம்மை பழிவாங்க மாட்டோம் என உத்தரவாதமளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்ததுடன் நகரசபை தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்போவதாகவும் வருகின்ற 16 ஆம் திகதி கொழும்பிற்கு சென்று ஜனாதிபதிக்கு மனுவினை கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.