யாழ்ப்பாணம் நல்லூரில் மீனவர்கள் கவனயீர்பு போராட்டம்!

pro 3 1
pro 3 1

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்பு போராட்டம் ஒன்றை இன்று(14) முன்னெடுத்துள்ளனர்.

இன்று காலை நல்லூர் முன்றலில் இவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பேரணியாக இந்தியத் தூதரகத்தைச் சென்றடைந்து, அங்கு இந்தியத் துணைத் தூதரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரில் இந்திய மீனவர்களது அத்துமீறல் தொடர்பில் தெரியப்படுத்தி, இதனால் தமது வாழ்வாதாரப் பாதிப்பு மற்றும் உடமைகள் சேதமாக்கப்படுவது தொடர்பில் எடுத்துக் கூறி எல்லை தாண்டுவதை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘இந்திய இழுவைப் படகே எமது எல்லைக்குள் வராதே’, ‘இலங்கை அரசே தடை செய்யப்பட்ட தொழில்களை நிறுத்து’ உள்ளிட்ட பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளதாவது, வட.மராட்சிக் கடற்ப்பரப்பில் கடந்த சில தினங்களாக இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரையில் இருந்து சுமார் ஒன்பது கடல் மைல் தூரத்தில் நின்று மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட றோளர் படகினைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் வடமராட்சி மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடலில் விடப்படும் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை அறுத்து நாசம் செய்து வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக மிக அதிகளவில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்று வருகிறது. இதனைக் கண்டித்து கவனயீர்ப்பு பேரணியொன்றை நடத்தியுள்ளோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.