மாகாண கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தை இராணுவத்திடமிருந்து மீட்டுத்தாருங்கள் -கூட்டுறவு ஆணையாளர்

vavuniya
vavuniya

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மாகாண கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தை இராணுவத்திடமிருந்து விடுவித்து தருமாறு வவுனியா கூட்டுறவு ஆணையாளர் இந்திரா சுபசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைதலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த கூட்டுறவு ஆணையாளர் இந்திரா சுபசிங்க,

“பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மாகாணக் கூட்டுறவு பயிற்சி நிறுவனம் நீண்டகாலமாக புனர்வாழ்வு இணைப்பு காரியாலயமாக செயற்பட்டு வருகின்றது.

அதனை விடுவிக்குமாறு பல்வேறு தரப்பிடம் கோரிக்கைகளை முன்வைத்தும் அது இன்னும் விடுவிக்கப்படவில்லை” – என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த பாராளுமன்றஉறுப்பினர்
“இராணுவத்தின் வசமுள்ள அரச கட்டடங்கள் ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டு வருகின்றன. குறித்த மாகாண கூட்டுறவுப் பயிற்சி நிலையமும் விரைவில் விடுவிக்கப்படும்” – என்று உறுதியளித்தார்.

குறித்த பயிற்சி நிலையத்தை விடுவிக்குமாறு கடந்த காலங்களில் இடம்பெற்ற மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளாலும், பொது அமைப்புகளாலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன.

இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதேச செயலர் நா.கமலதாசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், எஸ். வினோநோகராதலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் து.நடராஜசிங்கம், நகர சபைத் தலைவர் இ.கௌதமன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.