20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதனையடுத்து, குறித்த குழுவின் அறிக்கை நாளைய தினம் இடம்பெறவுள்ள அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
குறித்த குழுவில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவபடுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 9 பேர் உள்ளடங்குகின்றனர்.
20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டி வருகின்றது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இந்த திருத்தத்தை கொண்டுவருவது சிறந்தது என அரசாங்க தரப்பினால் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஆராய்வதற்கு குழுவொன்றை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.