நாட்டில் பெரும்பாலான விடயங்களை சிங்கள பௌத்த பெயரில் அடையாளப்படுத்திக் கொள்வது தவறான விடயமாகும்என முன்னாள் வெளிவிவகாரஅமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவரின் குறித்த கருத்துக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த கருத்துத் தொடர்பில் மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்றையதினம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையின் பெரும்பாலான விடயங்களை சிங்கள பௌத்த பெயரில் அடையாளப்படுத்துவது முழுமையாக தவறான விடயமாகும்.
இந்தியாவை எடுத்துக் கொண்டால் அங்கு ஹிந்து மொழியே பெரும்பான்மை மொழியாகும்.அதனால் அது ஹிந்தி நாடு என்று யாரும் கூறுவதில்லை.
இந்தியாவுக்கு இந்தியா என்றே கூறுகின்றார்கள். அந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால் காவி உடைகளை வியாபாரமாக செய்கின்ற தேரர்களும், பௌத்த மதம் குறித்து தெளிவில்லாத நபர்களுமே இதனை இன்று துரதிஷ்டவசமாக புரிந்து கொள்ளாது இருக்கின்றார்கள்.
இந்த சில தேரர்களினாலேயே பெளத்த மதத்தின் தோற்றப்பாடு நாளாந்தம் அழிவடைகின்றது.அந்தத் தேரர்கள்தான் இன்று நாடாளுமன்றத்துக்கு செல்ல ஒவ்வொருத்தரை அடித்துக் கொண்டு தடுமாறுகின்றார்கள்.
தேரர்கள் தான் நாட்டில் இன மதங்களுக்கு எதிராக பாகுபாட்டையும் வைராக்கியத்தையும் உண்டுபண்ணுகின்றார்கள்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.