வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு,தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் இன்றைய தினமும் இடம்பெறவுள்ளன.
இந்த மனுவில்,பிரதிவாதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுவட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனினால் இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த மனு,மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மஹிந்த சமயவர்தன மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர் கொண்ட குழுவினரால் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வட மாகாண சபையின் தலைமைச் செயலாளராக கடமையாற்றிய அந்தோனிப்பிள்ளை பத்திநாதன் மற்றும் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்னாள் செயலாளர் சிவலிங்கம் சத்தியசீலன் ஆகியோரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதனை அடுத்து, குறித்த வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக, இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ள தாம் தயாராவே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரன் தரப்பினர் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .