வவுனியா பேருந்து நிலையத்திற்குள் வியாபாரம் செய்யத் தடை 40 வியாபாரிகள் பாதிப்பு!

Vavuniya Bus Stand 1
Vavuniya Bus Stand 1

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்குள் சென்று பேருந்துகளில் ஏறி நடைபாதை வியாபரம் மேற்கொள்ளத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் இதனை நம்பி இத் தொழிலை மேற்கொண்டு வரும் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமது வழமையான செயற்பாடுகளை தொடர்ந்து பேருந்து நிலையத்திற்குள் சென்று மேற்கொள்வதற்கு தீர்வினை பெற்றுத்தருமாறும் அவர்கள் கோருகின்றனர் .

இவ்விடயம் குறித்து பாதிக்கப்பட்ட நடை பாதை வியாபாரிகள் மேலும் தெரிவிக்கையில் ,

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளில் ஏறி வியாபாரம் மேற்கொள்வதற்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் இத் தொழிலை மேற்கொண்டு வரும் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . குறிப்பாக பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு குடிதண்ணீர் போத்தல் , கச்சான் , கைக்குட்டை முகக்கவசம் பழவகைகள் போன்ற பயணிகளுக்கு தேவையான பொருட்களை எடுத்து சென்று வியாபாரம் மேற்கொண்டு வருபவர்களை புதிய பேருந்து நிலையத்தின் நிர்வாகத்தினரான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் அனுமதிக்கவில்லை .

இதனால் இத் தொழிலை மேற்கொண்டு வரும் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளோம் . இந்த 40 பேரும் அவர்களது குடும்பங்களும் இவ்வாறான ஒரு நிலையில் நடுத் தெருவிற்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . எனவே எமது வறுமை நிலையை கருத்திற்கொண்டு எமது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கையினை இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான தீர்வினை பெற்றுத்தரவேண்டும் என்று மேலும் கோரியுள்ளனர்.