இரகசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது பயன்படுத்திய தனிப்பட்ட கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணனி ஆகியவற்றை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அதன் செயலாளருக்க பணிப்புரை விடுத்துள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிப்புரைக்கு அமைய கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அவரின் கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணினி ஆகியனவற்றை ஆணைக்குழுவின் காவல் துறை பிரிவு கையகப்படுத்தியிருந்தது.
குறித்த கருவிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட குரல் பதிவுகள் அல்லது வேறு சாட்சியங்கள் காணப்பட்டால் அது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.