நாட்டின் ஜனாதிபதி அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து நாட்டைக் கட்டியெழுப்பக் கூடியவராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்த சர்வமதத் தலைவர்கள், அவர் சிறுபான்மை மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கக்கூடியவராகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தேசிய சர்வமத செயற்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றுத் திங்கட்கிழமை கொழும்பு- ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில் இடம்பெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் கிறிஸ்தவ, பௌத்த, இந்து மற்றும் இஸ்லாம் மதத் தலைவர்கள் கலந்து கொண்டதுடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எந்த வகையில் செயற்படவேண்டும் என்பது தொடர்பில் தமது கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.
அந்த வகையில் யாழ்ப்பாணம் சர்வமதப் பேரவை உறுப்பினர் அருட்தந்தை ஈனொக் பூ.புனிதராஜா குறிப்பிடுகையில்,
ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்தத் தேர்தல் நாட்டின் சிறந்த எதிர்காலத்துக்கு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும். இந்தத் தேர்தல் காலத்தில் நாம் மூன்று விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். இது தொடர்பில் சர்வமதத் தலைவர்கள் என்ற வகையில் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். அந்த வகையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூன்று விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும்.
அடிப்படை வாதக் கருத்துகளின் ஊடாக மக்களை திசை திருப்பும் முயற்சிகளை முன்னெடுப்பதை அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். வெறுப்பூட்டும் பொய்யான கருத்துகளை முன்வைத்து பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது. இன அடிப்படை வாதத்தைப் பேசி மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தாது சமாதானத்துடன் கூடிய அமைதியான நாட்டைக் கட்டியெழுப்பக் கூடியவராக இருத்தல் வேண்டும்.
பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் யாழ். பிரதேசத்தில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்த வகையில் யார் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வந்தாலும் அந்தப் பிரச்சினைகளை கூடிய விரைவில் தீர்த்து வைக்கக் கூடியவராக இருத்தல் வேண்டும். அதே வேளை இன,மத, குல பேதங்களைக் களைந்து சமாதானத்துடன், வாழக்கூடிய சூழ்நிலையை எதிர்கால சந்ததியினருக்கு பெற்றுக்கொடுக்கக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும் என்றார்.
மௌலவி எஸ்.என்.எம்.சுல்பிகார் குறிப்பிடுகையில்,
நாட்டின் ஜனாதிபதியாக வரக்கூடியவர் நாட்டிலுள்ள அனைத்து இன மக்களுக்கும் உரிய தலைவராக தெரிவு செய்யப்படவிருக்கின்றார். அந்த வகையில், தெரிவு செய்யப்படக்கூடிய ஜனாதிபதி இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் அரவணைத்துக்கொண்டு, அவர்களுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியது அவசியமானதாகும். அவர் ஒரு மதத்தினரையோ, வர்க்கத்தினரையோ புறக்கணித்து செயற்படுபவராக இருக்கக் கூடாது. ஏனெனில் ஒரு சாராரை மாத்திரம் சேர்த்துக்கொண்டு ஜனாதிபதியாக முடியாது. ஏனெனில், இந்த நாட்டில் முஸ்லிம், தமிழ் மக்கள் ஜனாதிபதி ஆகிவிட முடியாது. ஏனெனில் சிங்கள, பௌத்த மக்களே பெரும்பான்மை இனத்தவராக காணப்படுகின்றனர். ஆகவே, சிங்கள பௌத்த தலைவர் ஒருவராலேயே நாட்டின் ஜனாதிபதியாக முடியும்.
இந்நிலையிலேயே சிறுபான்மையினராகிய நாம் அவரை ஏற்று தெரிவு செய்கின்றோம். ஆகவே, அவ்வாறு தெரிவு செய்யப்படும் தலைவர் முன்மாதிரியுடையவராக இருத்தல் வேண்டும். ஓர் இன, மதத்தைச் சார்ந்தவராக இருக்கக் கூடாது.
பெரும்பான்மையினரது வாக்குகளை மாத்திரம் கொண்டு ஜனாதிபதியாகிவிடலாம் என்ற தேர்தல் பிரசாரங்கள் சிறுபான்மை மக்கள் மத்தியில் குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் புறக்கணித்து நாட்டின் ஜனாதிபதியாகிவிட முடியாது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் சமதானத்துக்கு வழிவகுக்கக் கூடிய ஒருவரை தெரிவு செய்தல் அவசியமானதாகும் என்றார்.
ஸ்ரீ ஜின்னாரத்ன தேரர் குறிப்பிடுகையில்,
தேர்தல் காலமாக இருப்பதனால் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக படையினர் கூறுகின்றனர். இந்நிலையில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என்று நாம் கூறுவோமானால் அது பாதுகாப்பு படையினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயலாகும். ஆகவே பொய்யான கருத்துகளை முன்வைப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். ஜனாதிபதித் தேரதல் பிரசாரங்களின் போது இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் தான் செயற்பட வேண்டும்.
முழு நாடும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட்டே ஜனாதிபதிக்கான தேர்வு இடம்பெறுகின்றது. இதன்போது நாட்டின் வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர்களாக கருதப்பட வேண்டும். மாறாக அவர்களை இன,மத ரீதியில் பிரித்துப் பார்த்தல் பொருத்தமற்ற விடய மாகும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிப்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதே போல் அவர்களுடைய வாக்குகளும் முக்கியமானதாகும். ஆகவே, இவற்றைக் கருத்தில் கொண்டு அமைதியான தேர்தலை நடத்துவதன் ஊடாக எதிர்காலத்தில் சிறந்த தலைவரை தெரிவு செய்தல் அவசியமானதாகும் என்றார்.