வவுனியா குளத்தில் மண்நிரப்பி சுற்றுலா மையம் அமைத்தல் தொடர்பான வழக்கு 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

download 2 1
download 2 1

வவுனியா குளத்தில் மண் நிரப்பி சுற்றுலா மையம் அமைக்கப்பட்டு வருவதற்கு எதிராக குடியிருப்பு கமக்காரர் அமைப்பால் வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் 25 ஆம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


வவுனியா குளத்தில் நகரசபையினால் மண் நிரப்பப்பட்டு சுற்றுலா மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் இதனை ஆட்சேபித்து குறித்த குள கமக்காரர் அமைப்பால் வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 
இந் நிலையில் இன்று விசாரணைக்கு குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது  வழக்கை முதற்தோற்றத்திலேயே தள்ளுபடி செய்யுமாறு நகரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள வழக்கறிஞர்களால் இரண்டு ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டது.


அவற்றில் ஒரு ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டது.மற்றைய ஆட்சேபனை தொடர்பில் 25ம் திகதி தெரிவிக்கப்படும் என நீதிபதியால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 
இந் நிலையில் குறித்த வழக்கு கடந்த  14ம் திகதி  எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழங்கப்பட்ட ஆணையாகிய “குறித்த இடத்தில் மேலதிக அபிவிருத்தி வேலைகள் எதையும் செய்யக்கூடாது” என்ற ஆணை தொடர்கிறது.
இவ்வழக்கில் கமக்காரர் அமைப்பு சார்பில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனும் நகரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் சார்பில் சட்டத்தரணிகள் யூஜின் ஆனந்தராஜா, திருச்செல்வம் திருவருள், ம. சுதர்சினி, யாழினி கௌதமன், மரியநிசாந்தினி தியாகரன் ஆகியோர் முன்னிலையானார்கள்.