ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ஷானி அபேசேகரவிற்கு அறிவித்தல்!

SHAANI ABESEGARA
SHAANI ABESEGARA

சிறை வைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகரவை அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 28 ஆம் திகதி அவரை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடற்படை புலனாய்வு பிரிவின் கனிஸ்ட அதிகாரி காமினி செனவிரத்ன மற்றும் பிரதமர கனிஸ்ட அதிகாரி கே.பி.சமிந்த ஆகியோர் முன்வைத்த முறைப்பாட்டுக்கமையவே ஆணைக்குழு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கடந்த 2006 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தமக்கு எதிராக மனித படுகொலை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மேற்குறித்த இருவரும் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர்.

இந்த முறைப்பாட்டை ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுப்பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன, சானி அபேசேகர உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 28 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்துள்ளார்.

இதேவேளை ஆணைக்குழுவுக்கு கிடைத்த பல முறைப்பாடுகள் குறித்து நேற்றும் (21) ஷானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகள் சாட்சியம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.