எதிர்க்கட்சியினர் அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வதில் தமக்குப் பிரச்சினை கிடையாது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கின்றார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதிமன்றத்துக்கு செல்வது நல்லவிடயம் தான். அத்துடன் 19 ஆவது திருத்தத்தில் காணப்படுகின்ற சில விடயங்கள் பாதுகாக்கப்படவும் வேண்டும்.
குறிப்பாக தகவல் அறியும் சட்டம், ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஐந்து வருடமாக மட்டுப்படுத்தல், இரண்டு முறைகள் மாத்திரமே போட்டியிட முடியும் என்ற விடயம் போன்ற 19 இல் காணப்படுகின்ற முக்கிய விடயங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.
பிரஜாவுரிமை இல்லாத நபர்களுக்கு நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கின்ற உரிமை மறுக்கப்படுகின்றமை போன்ற விடயங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்” என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.