தியாகி திலீபனின் நினைவாக வவுனியாவிலிருந்து நல்லூர் வரையிலான நடை பயணத்தினை ஏற்பாடு செய்தவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தியாகி திலீபனின் நினைவாக கடந்த 16ஆம் திகதி வவுனியா நகரசபை பொங்குதமிழ் தூபிக்கு முன்பாகவிருந்து நல்லூர் வரையிலும் நடைபயணம் ஒன்று தமிழ் தேசிய மக்கள் முண்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நடை பயணத்தினை நிறுத்துமாறு அதன் ஏற்பாட்டாளர்களிற்கு பொலிசாரால் தெரிவிக்கப்பட்டதுடன், அதற்கான தடை உத்தரவினை கோரி வவுனியா பொலிசாரால் நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதற்கமைவாக குறித்த நடை பயணத்திற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் இவ் நடைபயணம் இடம்பெறவில்லை.
இது தொடர்பாக மன்றில் அறிக்கை செய்வதற்காக நடைபயணத்தை ஏற்பாடு செய்த வவுனியா நகரசபை உறுப்பினர் பி.ஜானுயன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கயேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கயேந்திரன் ஆகியோரை எதிர்வரும் 28ஆம் திகதி காலை நீதிமன்றில் ஆஜராகுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றால் கட்டளை வழங்கப்பட்டுள்ளது. அந்த கட்டளை அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.