வெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்

IMG 20200926 WA0041
IMG 20200926 WA0041

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதி இலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழா நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது நாட்கள் இடம்பெற்று இன்று(26) பத்தாம் நாள் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றது.

அந்தவகையில் இன்றையதினம் ஆலய வளாகத்தில் 108 பானைகளில் பொங்கல்பொங்கி விஷேட பூஜை நிகழ்வுகளுடன் கோலாகலமாக பொங்கல் விழா நிகழ்வுகள் இடம்பெற்றது.

காலை11 மணிக்கு ஆரம்பமாகிய பூஜை நிகழ்வுகளில் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் புவனேஸ்வரன்ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

இதேவேளை ஆலயவளாகத்தில் அதிகளவான பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன்,ஆலயத்திற்கு வருகைதரும் பக்கதர்கள் பதிவு செய்யப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் ஆலயத்திற்குள் உட்செல்வதற்கான சந்தியில் ஒலுமடு பிரதான‌ வீதியை அண்டி இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பொங்கல் விழாவிற்கு வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பினால் 53 பானைகள் உபயமாக வழங்கப்பட்டுள்ளதுடன், அன்பாலயா இளைஞர்களால் தண்ணீர் பந்தலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை ஆலயத்தில் தியாகி தீலிபனை நினைவுகூர்ந்து தீபம் ஏற்றி நிகழ்வுகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என வவுனியா நீதிமன்றால் வழங்கப்பட்ட தடை உத்தரவு கோரிக்கை ஒன்றின் பிரதியை நெடுங்கேணி பொலிசார் ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.