நாட்டில் ஒரு மாத பொலிஸ் சுற்றிவளைப்பில் கைதானவர்கள் இத்தனை பேரா !

images 1
images 1

இலங்கையில் இவ்வருடம் கடந்த செப்டெம்பர் முதலாம் திகதி முதல் 30ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 65 ஆயிரத்து 620 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிபொருள், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இச்சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 12 ஆயிரத்து 883 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டுகளில் 25 ஆயிரத்து 644 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 8 ஆயிரத்து 707 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 6 ஆயிரத்து 349 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தகுற்றச்சாட்டில் 456 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 273 பேரும், வெடிபொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 16 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 10 ஆயிரத்து 842 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சுற்றிவளைப்புகளின்போது ரி – 56 வகை துப்பாக்கிகள் 6, கைத்துப்பாக்கிகள் 7, ரிவோல்வர் வகை துப்பாக்கிகள் 7, ரிபீட்டர் வகை துப்பாக்கி 1, உள்நாட்டுத் துப்பாக்கிகள் 233, 12 துளை கொண்ட துப்பாக்கிகள் 69, நாட்டுத் துப்பாக்கிகள் 9, தோட்டாக்கள் 644, வாள்கள் 9, கத்திகள் 2 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு, இந்த நடவடிக்கைகளின்போது வெடிபொருள் 339 கிராம், டெட்டனேட்டர்கள் 133, கைக்குண்டுகள் 40 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோத மதுபானம் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 233 லீற்றர் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.