மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரை 1488 பேர் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு வருவதாகவும் அதிலும் 13வயது முதல் 17வயதினரை கொண்ட பாடசாலை மாணவர்கள் இலக்கு வைக்கப்பட்டு வருவதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போதைப்பொருள் தடுப்புவு செயலணியின் மாவட்ட மட்ட கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (6) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பணிமனையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்த தலைமையில் நடைபெற்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாது,
மாவட்டத்தில் தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு வருவதாக அதிலும் பாடசாலை மாணவப பருவத்தினர் தான் குறிப்பாக இலக்கு வைக்கப்பட்டு வருவது அவதானிக்க கூடியதாகவும் அதிலும் 13வயது முதல் 17வயதினர் தான் தங்களுக்கு போதிய விழிப்புணர்வு பெற்றோரின் கண்கானிப்பின்றி வழி தவறுகின்றனர் என பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இவ்வாண்டு 2020-01-01 முதல் இன்று வரையும் கெரோயின் வைத்திருந்த குற்றத்திற்காக 190 பேரும் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த 28 பேரும், கஞ்சா வைத்திருந்த 245 பேரும், கசிப்பு தயாரிப்பதற்கான கொடா வைத்திருந்த குற்றத்திற்காக 155 பேரும், கசிப்பு உற்ப்பத்தியிலும் விற்பனையில் ஈடுபட்டவர்கள் 870 பேர் உட்பட 1488 பேருக்கும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் இருந்து போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையினை ஆரம்பிப்பதற்கும் அதிலும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் முதல் முறையாக முன்னெடுப்பதற்கு இந்த செயலணியில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் மாவட்டத்தில் செயற்ப்பட்டு வருகின்ற மதுவரி திணைக்களம், சமூக சீர்திருத்த பிரிவினர் கிழக்கு பல்கலைகழக மருத்துவ பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி கே.அருளானந்தம், வைத்திய கலாநிதி கே.அருள்யோதி, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் வலய கல்வி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி ரஐணி உதயாகர்ன், சிறச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஸ்ட உத்தியோகத்தர் எஸ்.மோகன், மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.