கம்பஹா மாவட்டத்தை பூரணமாக முடக்காதது ஏன்? ஹர்ஷண ராஜகருணா

1111111
1111111

கம்பஹா மாவட்டத்துக்கு பூரண ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டு ஐந்து நாட்களாகியும் அரசாங்கம் இதனை ஏன் மேற்கொள்ளாமல் இருக்கின்றது என்ற சந்தேகம் எழுகின்றது என கம்பஹா மாவட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட  கேள்வியொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொடை பிரதேசத்தில் ஆடை தொழிற்சாலை பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கடந்த சனிக்கிழமை மாலையே உறுதிப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் இன்று கொரோனா தொற்று உறுத்திப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியிருக்கின்றது.

இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தின் கம்பஹா பொலிஸ் பிரதேசத்தின் அனைத்து பிரிவுக்கும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டிருப்பதாக நேற்று ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக பொலிஸ் நிலையங்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவ்வாறு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று காலையில்  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பதாக எமக்கு அறிவிக்கப்பட்டது.

ஆனால் பியகம போன்ற இன்னும் பல பிரதேசங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவில்லை.  தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டு இன்று வரை கம்பஹா மாவட்டம் பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுபடுத்தப்படாமல் இருப்பது, இந்த தொற்று மேலும் பரவும் அபாயம் இருக்கின்றது. 

அதனால் அரசாங்கம் கம்பஹா மாவட்டத்துக்கு மாத்திரமாவது ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் அதனை இதுவரை செய்யாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எமக்கு எழுகின்றது என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.