எழுத்து மூலம் உறுதி வழங்கினால் பட்டதாரிகள் சஜித்துக்கு வாக்களிப்போம்

Graduates
Graduates

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தருவதாக வாய்மூல அறிவித்தலை தவிர்த்து எழுத்து மூலம் உறுதி வழங்கினால் பட்டதாரிகள் அனைவரும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்போம் என மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.அனிர்தன் கோரிக்கை முன்வைத்தார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (Nov.03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். மட்டு. ஊடக அமையம் திறக்கப்பட்டு முதலாவது ஊடக சந்திப்பாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இவ் ஊடகச்சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் சீ.மேரிமீரா உட்பட வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டார்கள்.

அவர் மேலும் தெரிவிக்கையில் …

நாங்கள் எங்களுடைய உழைப்பில் கஷ்டப்பட்டு பட்டதாரிகளாக இன்று வேலையற்று இருக்கின்றோம். நாங்கள் 2014ஆம் ஆண்டு முதல் இன்று வரையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2300 பேர் வேலையற்ற பட்டதாரிகள் எங்களுடைய சங்கத்தில் வேலையில்லாமல் இருக்கின்றார்கள். எங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எங்கள் மீது கரிசனை காட்டாமலும் வேலைவாய்ப்புக்களை தர மறுத்துள்ளார்கள். எங்களுக்கு கடந்த அரசாங்கம் மீது நம்பிக்கை இருக்கவில்லை.

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தருவதில் நம்பிக்கை இழந்துள்ள நிலையில் நேற்றைய தினம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கம்பளையில் நடைபெற்ற கூட்டத்தில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கி பட்டதாரிகளின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக தெரிவிக்கப்பட்ட செய்தியானது எங்களுக்கு மகிழ்ச்சி தருகின்றது. இதனை வேலையற்ற பட்டதாரிகளாகிய நாங்கள் முழுமனதுடன் வரவேற்கின்றோம்.

இவ்வாறான சூழ்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளாகிய நாங்கள் கோரிக்கையை முன் வைக்கின்றோம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரமதாச அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்வரும் 9ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவ்வாறு வருகை தரும் சஜித் பிரேமதாசவிடம் நாங்கள் எழுத்து மூலமான கோரிக்கையை வழங்குவோம். இதனை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பட்டதாரியாகிய எங்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும். இவ்வாறு சஜித் பிரேமதாச உறுதிமொழி வழங்கினால் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சஜித்துக்கு வாக்களிப்போம். அவ்வாறு உறுதிமொழி வழங்காவிட்டால் முழுமையாக பகிஸ்கரிப்போம். இதனால் 10,000 மேற்பட்டவர்கள் வாக்களிக்க தவிர்க்க நேரிடும் எனத் தெரிவித்தார்.