வன்னித்தேர்தல் தொகுதியில் உள்ள மக்கள் எதிர்கொள்கின்றமை சில்லறைத்தனமான பிரச்சினைகள்! என்கின்றார் சபாநாயகர்

unnamed 3 2
unnamed 3 2

மன்னார், முல்லைத்தீவு, வவுனியாவைச் சேர்ந்த 6 ஆயிரத்து 682 குடும்பங்களின் பிரச்சினைகளைச் ‘சில்லறைப் பிரச்சினைகள்’ என்று கூறிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இவ்வாறான கேள்விகளைக் கேட்டுப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன், கடந்த அரசில் வீடமைப்புத்துறை அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாஸவினால் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் திட்டமிடாத வகையில் முன்னெடுக்கப்பட்ட 6 ஆயிரத்து 682 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாலும், நிதி வழங்கப்படாததாலும் அந்தக் குடும்பங்கள் நடு வீதியில் அநாதரவாக நிற்கின்றமை தொடர்பிலும், கடந்த அரசு ஒதுக்கிய நிதியிலும் பார்க்க தற்போது நிதி குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், பட்டதாரி நியமனங்களில் இந்தியப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் கேள்விகளை எழுப்பினார்.

இதில் ஒரு கேள்விக்கு மட்டுமே பிரதமர் பதில் வழங்கியதுடன் மற்றையவை தொடர்புபடாத கேள்விகள் எனக் கூறினார்.

இதன்போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, “பிரதமரிடம் கேள்விகளைக் கேட்கும்போது சில்லறைத்தமனான கேள்விகளைக் கேட்டு பிரதமரின் நேரத்தை வீணடிக்கக்கூடாது. இதனை சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. கவனத்தில்கொள்ள வேண்டும்” என்றார்.

இதையடுத்து உடனடியாக எழுந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் ”சபாநாயகரே நான் இங்கு சில்லறைத்தனமான கேள்வியை எழுப்பவில்லை. வன்னி மாவட்டத்திலுள்ள 6 ஆயிரத்து 682 குடும்பங்களின் பிரச்சினைகளைத்தான் கேட்கிறேன். இது எப்படி உங்களுக்குச் சில்லறைப் பிரச்சினையாகும்?” எனக் கேட்டபோது மீண்டும் சபாநாயகர், “பிரதமரிடம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளையே கேட்க வேண்டும்” என்றார்.

ஆனால், சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு முதல் பிரதமரிடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கஞ்சா தொடர்பில் கேள்வி கேட்டிருந்ததுடன் அதற்குப் பிரதமரும் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.