வவுனியாவில் சுகாதார நடைமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டுகோள்!

வவுனியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் சிலருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு; தொற்று உறுதி செய்யப்படாத நிலையில் அவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு சுகாதார நடைமுறையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பொலிசார், படையினர், சுகாதாரத்துறையினர், அரச அதிகாரிகள் ஆகியோருக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் என்று வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்துள்ளார் .

வவுனியாவில் தற்போதைய நிலைமைகள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நடைமுறையிலுள்ள சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றி முககவசம் அணிதல், வங்கிகள், அரச திணைக்களங்களுக்கு செல்ல முன் சவர்க்காரம் இட்டு கைகழுவுதல் , சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கல் போன்ற செயற்பாடுகளை தொடர்ந்து பின்பற்றவும். பொது நிகழ்வுகள், ஊர்வலங்கள், கழியாட்ட நிகழ்வுகள், தனியார் வகுப்புக்கள், பொதுமக்கள் ஒன்றுகூடும் அனைத்து நிகழ்வுகளும் தற்காலிகமாக மறு அறிவித்தல் வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளது .

பொலிஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முக்கவசம் அணிவதுடன் வெளியே கைகழுவி உட் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் . வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வழிநடத்தலில் நகரை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு பொதுமக்கள் படைத்துறையினர், சுகாதாரத் துறையினருக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் மேலும் தெரிவித்துள்ளார் .