கொவிட்-19 திடீர் பரம்பல் காலப் பகுதியில் வைத்தியசாலைக்கு செல்லும்போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல் குறிப்புகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
கொவிட்-19 பரவல் காரணமாக நாட்டில் எழுந்துள்ள சூழலில், வைத்தியசாலைக்குச் செல்லும் பொதுமக்கள் முற்பாதுகாப்பு நடைமுறைகளான முகக் கவசத்தினை கட்டாயம் அணிதல், தனி நபர்களுக்கிடையில் ஆகக் குறைந்தது ஒரு மீற்றர் சமூக இடைவெளியினைப் பேணுதல் மற்றும் கைகழுவுதல் ஆகியவற்றினை அவசியம் கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தமது உறவுகளை பார்வையிடச் செல்வதனை இயலுமானவரை மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டப்படுகின்றனர். அவ்வாற அனுமதிக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு தேவையான பொருட்களை வழங்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அவர்களை நேரடியாக விடுதிகளில் சந்திப்பதை தவிர்த்து பொருத்தமான வழிகளில் பொருட்களை அவர்களிடம் சேர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன் அத்தியாவசிய மருத்துவத் தேவைகளுக்கு வதிவிடங்களுக்கு அருகாமையில் உள்ள வைத்தியசாலையினை நாடுமாறும் சுகாதார அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.