கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த குடும்பத்தினருக்கு விளக்கமறியல்!

திருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கணவன் மற்றும் மனைவி ஆகியோரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் முன்னிலையில் இன்று (12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மொரவெவ காவல்துறையினரும் சர்தாபுர விசேட காவல்துறை அதிரடிப் படையினரும் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்களின் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சா மலசலகூட குழிக்குள் போட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்தே சந்தேக நபர்களான 38 வயதுடைய கணவர் மற்றும் அவரது மனைவி (34 வயது) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆணுக்கு ஏற்கனவே முன் குற்றங்கள் இருக்கின்றமையும் நீதவானின் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.