முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீதான தாக்குதலிற்கு செல்வம், வினோ கண்டனம்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 696x471 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 696x471 1

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் மற்றும் குமணன் ஆகியோர் மீது சமூக விரோத செயற்பாட்டாளர்களினால் திங்கட்கிழமை (12) மேற்கொள்ளப்பட்ட தாக்குல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும்,குறித்த சம்பவத்திற்கு எதிராக காவல் துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் மற்றும் குமணன் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இலங்கையின் வட பகுதியில் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் பல்வேறு அச்சுருத்தல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும், அச்சுருத்தப்படுவதும் தொடர் கதையாகவே உள்ளது.

தற்போதைய ஆட்சிக் காலத்திலும் வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்கள் பலர் விசாரனைக்கு அழைக்கப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றது.

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இடம் பெற்ற சம்பவங்களுக்கு இது வரை நீதி கிடைக்கவில்லை

இதன் ஒரு தொடர் கதையாகவே முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் இருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் மரக்கடத்தல் மாபியாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற இரு ஊடகவியலாளர்கள் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.

-சட்ட விரோத செயற்பாடுகளை வெளிப்படுத்த முனைந்த ஊடகவியலாளர்கள் மீதே இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

ஒரு சில அதிகாரிகளின் துணையுடன் மரக்கடத்தலில் ஈடுபட்டு வரும் குழுவொன்று தொடர்பில் துணிச்சலுடன் செய்தியை வெளியிட முனைந்த ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வண்மையாக கண்டிக்கின்றோம்.

குறித்த ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாத வகையில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட இலங்கை அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.