மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் கம்பஹாவைச் சேர்ந்த தாதியார் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அவர் கடமையாற்றிய ஒரு பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அங்கு கடமையாற்றிய தாதியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோனை மேற்கொள்ளவுள்ளதாகவும் அத்தியாவசிய தேவையில்லாமல் எவரும் வைத்தியசாலைகளுக்கோ அல்லது வீதிகளிலே செல்ல வேண்டாம் எனவும் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று என சமூகவலைத்தளங்களில் வெளிந்த செய்தியையடுத்து மக்கள் பீதியடைந்தனர். இது தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த தாதியர் மட்டு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்ததாகவும் கடந்த 4ம் திகதி அவர் அவரது ஊரான கம்பஹாவிற்கு விடுமுறையில் சென்ற நிலையில் அவரது கணவனின் சகோதரி பிறண்டிக் ஆடைத்தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த நிலையில் அவரை பி.சிஆர் பரிசோதனைக்குட்படுத்திய போது அவருக்கு கொரோனா தொற்று கண்டுபிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரது குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பரிசோதனையின் போது குறித்த தாதியருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு அவர் கொரோனா தொற்று சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இதனையடுத்து குறித்த தாதியர் கடமையாற்றிய பிரிவு இன்று (13) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அவருடன் கடமையாற்றியவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களை சுயதனிமையாக இருக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளதுடன் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
எனவே மக்கள் பதற்றமடைய தேவையில்லை எனவும் முகக்கவசம் அணியுமாறும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் பொது மக்கள் அத்தியாவசிய தேவையில்லாமல் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.