கம்பஹாவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது குறித்து தீர்மானம்!

கம்பஹா மாவட்டத்தின் 18 காவல்துறை பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “18 காவல்துறை பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுகின்றது.

அப் பிரதேசங்களில் கடைகளையும் மருந்தகங்களையும் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசங்கள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணித்ததன் பின்னர் நாளையளவில் உணவகங்கள் மற்றும் மருந்தகங்களைத் திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும்.

இன்றும் நாளையும் ஊரடங்குச் சட்டம் உள்ள பிரதேசங்களுக்குப் பயணிப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் எவரையும் வாகனங்களில் ஏற்றவோ வாகனத்திலிருந்து இறக்கவோ கூடாது. எனினும் அந்தப் பிரதேசங்களில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், கைத்தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களினதும் தனிப்பட்ட ஆவணங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.

ஊழியர்களின் முழுமையான பெயர், அடையாள அட்டை இலக்கம், நிரந்தர முகவரி, தற்காலிக முகவரி, அவரைத் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி போன்ற விடயங்கள் அந்த கோப்பில் சேர்க்கப்பட வேண்டும்.

மினுவாங்கொட கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் தகவல்களை ஆராயும்போது இந்த தனிப்பட்ட விபரங்கள் புதுப்பிக்கப்படாமையே பெரும் சிக்கலாக அமைந்திருந்தது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.