இரண்டு ஆசிரியர்கள் உட்பட 28 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்!

மாளிகாவத்தையில் உள்ள பாடசாலை ஒன்றின் 28 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் பாடசாலைக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பாடசாலையை நடத்தியமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக மக்கள் ஒன்றுக் கூடுவதை தடைசெய்துள்ள நிலையில், இந்த பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனிடையே தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்த 254 பேர் இன்று 7 நிலையங்களில் இருந்து வெளியேறவுள்ளனர். இதனடிப்படையில் இதுவரை 52 ஆயிரத்து 612 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்துள்ளனர்.

முப்படையினர் நடத்தி வரும் 88 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது 9 ஆயிரத்து 703 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.