கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முக்கிய அறிவித்தல்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் அனைத்து ஊழியர்களும் நாளை முதல் தமது தொழிற்சாலை போக்குவரத்து சேவையின் மூலமாக மாத்திரம் தொழிற்சாலைக்கு வந்து செல்ல வேண்டும் என்று காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி நாளை முதல் ஊழியர்கள் தமது தனிப்பட்ட வாகனங்கள் மூலமாக தொழிற்சாலைக்கு வந்து செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் இதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தொழிற்சாலை அதிகாரிகளுக்கு காவல் துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதேவேளை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் பல ஊழியர்கள் அண்மையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தமது அலுவலக அடையாள அட்டையை காவல் துறை ஊரடங்கிற்கான அனுமதி அட்டையாக பயன்படுத்தி ஏனைய பகுதிகளுக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டுக்கு அமையவே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.