வவுனியாவில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் உட்பட இருவர் கைது!

5858585
5858585

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் திருடப்பட்ட 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டு இலத்திரனியல் மற்றும் தளபாட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பெண் உட்பட இருவரை கைது செய்துள்ளனர்.  

இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஓமந்தை, நொச்சிமோட்டைப் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் அமைந்திருந்த வீட்டில் இருந்து தொலைக்காட்சி, குளிரூட்டி, அவன், கட்டில், மெத்தை, கண்ணாடி மேசை, கதிரை, மேசை என சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்டதாக ஓமந்தைப் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வவுனியா ஓமந்தை குற்றத்தடுப்புப் பிரிவு காவல் துறையினர் மற்றும் போதை ஒழிப்பு காவல் துறையினர் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போது குறித்த பொருட்கள் வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவை மீட்கப்பட்டுள்ளதுடன், சிறிய பட்டா ரக வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஓமந்தை காவல் துறையினர் மேலும் சிலரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.