முகக்கவசம் தொடர்பில் காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை!

முகக் கவசங்களைப் பயன்படுத்திவிட்டு கண்ட இடங்களிலும் வீச வேண்டாம் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வீதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் சிலர் முகக் கவசங்களை அணிந்துவிட்டு அதனைப் பாதுகாப்பற்ற முறையில் வீசிச்செல்வதால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்கள் முறைப்பாடு செய்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முகக் கவசங்களைப் பயன்படுத்திய பின் பாதுகாப்பான முறையில் குப்பைத் தொட்டியில் அல்லது உரிய இடத்தில் போடுமாறு பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் அதனைச் சுகாதார முறையில் அகற்றாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.