தாய்ப்பால் புரையேறி சிசு மரணம் : புற்று நோயால் இளம் தாய் மரணம்

தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 4 நாட்களேயான ஆண் சிசுவொன்று மரணித்து விட்டதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (22) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், கிரான்- சின்னவேம்பு கிராமத்தைச் சேர்ந்த கனகரெட்ணம் செல்வராணி தம்பதிகளின் பெயரிடப்படாத குழந்தையே மரணித்துள்ளது.

வழமைபோன்று குறித்த தாய், குழந்தைக்கு தாய்ப்பால் அருந்தச்செய்த வேளையில் பால் புரைக்கேறி குழந்தை மரணித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரன் நாகப்பிரியா (வயது 27) என்ற பட்டதாரி பயிலுனரான இரண்டு மாத ஆண் குழந்தையின் தாய், புற்றுநோய் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (22) மாலை உயிரிழந்துள்ளார்.

இவருக்கு ஏற்கெனவே புற்றுநோய்க்கான சிகிச்சையின் பிரகாரம் ஒரு கால் அகற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவரது சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளின் பின்னர் நேற்று (23) உறவினர்களிடம் ஒப்படைப்பட்டது.