யாழ்ப்பாணம் மீன் வியாபாரிகள் அனைவருக்கும் பி.சீ.ஆர் பரிசோதனை!

யாழ். மாநகரசபை எல்லைப் பகுதிக்குள் உள்ள அனைத்து மீன் சந்தைகளிலும் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் பி.சீ.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

பேலியகொடை மீன் சந்தையைத்தொடர்ந்து திருகோணமலை மீன் சந்தை மற்றும் சில பிரதேசங்களில் விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகள் சிலரில் கொரோனாத் தொற்று இனங்காணப்பட்டதாலும் நுகர்வோர் இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்வதைத் தடுக்கும் நோக்கிலும் இன்றும் நாளையும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

குருநகர், பாசையூர், சின்னக்கடை, நாவாந்துறை, கல்வியங்காடு உள்ளிட்ட அங்காடிகளில் இருந்து குறிப்பிட்டளவு எண்ணிக்கையானோருக்கு முதல் கட்டமாக இரு நாட்களும் இந்தப் பரிசோதனை இடம்பெறவுள்ளது.

இவ்வாறு மேற்கொள்ளும் பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டால் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சந்தைகள் இயங்கும்.

இவ்வாறான பரிசோதனைகளை அடுத்த கட்டமாக மரக்கறிச் சந்தைகள் மீதும் மேற்கொள்வது தொடர்பிலும் ஆராயப்படுகிறது.