15 லட்சம் பெறுமதியான முதிரை குற்றிகள் மற்றும் பாலை தீராந்திகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட செம்மங்குன்று காட்டுக்குள் சட்ட விரோதமான முறையில் தொடர்ச்சியாக காட்டு மரங்கள் வெட்டப்பட்டு விற்பனை செய்து வருவது தொடர்பில் பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
பூநகரி காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த காட்டுப்பகுதியில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 26 முதிரை மர குற்றிகளும், 21 பாலை மர தீராந்திகளும் இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் அவதானித்து அவற்றை பாதுகாப்பான முறையில் காவல்துறை நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொட்ரபுடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தப்பிசென்றுள்ள நிலையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர். மீட்கப்பட்ட மரங்களின் பெறுமதி சுமார் 15 லட்சம் எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.
அண்மை நாட்களாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் சட்டவிரோத மர குற்றிகள் மீட்கப்பட்டு வருகின்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.