1500 ஊழியர்களை கொண்ட தொழிற்சாலையில் கொரோனா

image
image

காலி, கொக்கலை பகுதியில் அமைந்துள்ள பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊழியர் மீது நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவிலேயே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காலி மாவட்ட பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் வேணுரா கே. சிங்கராச்சி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தொழிற்சாலையின் இரு பெண் ஊழியர்கள் சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டு, காலி மஹமோதர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.

இதன்போதே அவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களின் பி.சி.ஆர். சோதனைகளில் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

இந் நிலையில் தற்போது குறித்த கொரோனா நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்திய மற்றைய நபரை அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

ரத்கமவில் வசிக்கும் இரண்டு ஊழியர்கள் நிறுவனம் வழங்கிய தனியார் போக்குவரத்தில் வேலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. தொழிற்சாலையின் கிட்டத்தட்ட 75-100 ஊழியர்கள் இவர்களுடன் போக்குவரத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந் நிலையில் பதிக்கப்பட்ட நோயளர்களுடன் தொடர்புகளை பேணிய ஏனைய ஊழியர்கள் மீது பி.சி.ஆர். சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்பட்ட ஊழியர்களது முடிவுகள் வெளியாகும் வரை அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கொக்கலை பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் சுமார் 1500 ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும் காலி மாவட்ட பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் சுட்டிக்காட்டினார்.