தெருச்சண்டை போல கடல் சண்டையை நீடிக்க விரும்பவில்லை – டக்ளஸ் தேவானந்தா

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் தெருச் சண்டைகள் போல் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் கடலில் சண்டை ஏற்படுவதை தடுக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கை இந்திய மீனவர்கள் இடையே ஏற்படும் பிரச்சினை நிரந்தரமாக தீர்ப்பதற்கு ஏதுவாக தமிழக முதல்வரை சந்தித்து தீர்வுகளைக் காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்.

இலங்கை இந்திய மீனவர்களின் சந்திப்புத் தொடர்பில் இந்தியாத் தரப்புகள் பேசுவதற்கு இரு திகதிகளை தருமாறு தூதரகம் ஊடாக என்னை தொடர்பு கொண்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா சூழ்நிலையினால் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதைத் தடுக்கும் முகமாக வீடியோ தொழில் நுட்பத்தின் ஊடாக குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்த தீர்மானித்துள்ளோம்.

எதிர் வரும் அமைச்சரவையில் குறித்த விடையம் தொடர்பில் கலந்துரையாடி திகதியை உறுதிப்படுத்த முடியும் என நினைக்கிறேன்.

அத்துடன் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக தமிழக முதல்வரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் இடம்பெற்றுவரும் நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் நிலவரங்கள் சிலவேளை சந்திப்புகளை தாமதப்படுத்தலாம்.

ஆகவே, நான் எடுத்துக்கொண்ட தீர்மானத்தின்படி தமிழக முதல்வரை சந்தித்து இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை காண்பதற்கான முழுமையான முயற்சிகளை மேற்கொள்வேன் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.