உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதை இடைநிறுத்துங்கள் – ஆனல்ட் வேண்டுகோள்

மாநகரத்திற்குற்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதை முற்றாக இடைநிறுத்துங்கள் என யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் இன்று (02) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தாக்கத்திலிருந்து நாம் பாதுகாப்புடன் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது மிகுந்த அவசியமாகும். அந்த வகையில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் மற்றும் கைகளை அடிக்கடி தொற்று நீக்கிகளைக்கொண்டு சுத்தம் செய்தல் போன்றவை அவசியமாக நாம் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகளாகும்.

இதற்கு மேலதிகமாக யாழ். மாவட்ட கொரோனா தடுப்பு உயர்மட்ட செயலணியின் தீர்மானங்களுக்கு அமைவாக யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட உணவகங்கள், குளிர்பானசாலைகள் மற்றும் உணவு விற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் (02) (மறு அறிவித்தல் வரை) தடைசெய்யப்படுகின்றது.

உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு உணவுகளை விநியோகிக்க வேண்டாமென உணவக உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். அத்துடன் உணவுகளை பொதி செய்து மாத்திரம் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதை முற்றாகத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொது மக்களையும் கேட்டுக் கொள்கின்றேன்.

கொரோனா வைரஸ் தாக்கம் பரவலில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக இந் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதனை அலட்சியம் செய்து உணவகங்களில் அமர்ந்து உண்பதற்கு உணவுகளை விநியோகம் செய்யும் உணவகங்கள் யாழ்.மாநகர சுகாதாரப் பிரிவினரினால் அடையாளப்படுத்தப்படுமிடத்து உரிய கடை நடத்துனர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், உணவகங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றேன்.

இது குறித்து மிகுந்த அவதானமாக செயற்படுமாறு பொது மக்களும், உணவக நடத்துனர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். இதனை நடைமுறைக்கு கொண்டுவருவதன் ஊடாக மக்கள் அதிகளவில் கடைகளில் தரித்திருப்பதனை ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். பொது மக்களின் பாதுகாப்பு கருதி எம்மால் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்மாறு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டிருந்தார்.