மட்டக்களப்பில் சிகை அலங்கார நிலையங்களை திறக்க அனுமதி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று இனங்காணப்படாத பிரதேசங்களில் மாத்திரம் சிகை அலங்கார நிலையங்களைத் திறப்பதற்கு மாவட்ட கொரோனா தடுப்புச்செயலணி அனுமதி வழங்கியுள்ளது.

மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இம்மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருதையிட்டு அதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை ஆராயும் நோக்குடன் அவசரமாகக் கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இவற்றில் வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களினதும் வெளி மாவட்டங்களுக்குச் செல்பவர்களினதும் தகவல்கள், வாகன விபரங்களை காவல்துறையினரின் உதவியுடன் பெற்றுக்கொண்டு சுகாதாரத் திணைக்களத்திற்கு வழங்குதல், கொரோனா நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வாழைச்சேனை காவல்துறை பிரிவில் நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் காவல்துறை ஊரடங்கினை மேலும் ஒருவாரம் நீடிக்க நடவடிக்கை மேற்கொள்ளல், மாவட்டத்தில் செயற்படுகின்ற அரச, தனியார் போக்குவரத்து பேரூந்துகளது விபரங்களைப் பெற்றுக்கொள்ளல், அரச சுற்று நிரூபத்திற்கமைவாக அரச அலுவலகங்களில் கடமை புரியும் ஊழியர்களின் எண்ணிக்கையினை மட்டுப்படுத்தி வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளல் போன்ற பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்விசேட கூட்டத்தில் பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்கிவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் லக்சிறி விஜயசேன, பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் எஸ். மயூரன், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான், மாவட்ட செயலகம், இராணுவ மற்றும் சுகாதாரத் திணைக்கள உயரதிகாரிகள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உட்பட பல திணைக்கள உயரதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.