தேர்தலில் இருந்து விலகுவதற்கு சிவாஜியிடம் கூட்டமைப்பு பகிரங்க வேண்டுகோள்!

samapanthan
samapanthan

ஜனாதிபதி தேர்தலில் இருந்து தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்தை விலகுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழில் நேற்று (Nov.10) இடம்பெற்ற ரவிராஜ் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“2005ஆம் ஆண்டில் நாங்கள் வாக்களிக்காமல் விட்டதால்தான் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றார். அவர் வெற்றி பெற்று 2005 தொடக்கம் 2015 வரை என்னென்ன செய்தார் என்பதை நான் சொல்ல தேவையில்லை. நாம் சிந்தித்து வாக்களித்திருந்தால் இவ்வளவு அழிவை சந்தித்திருக்க தேவையில்லை.

தம்பி சிவாஜிலிங்கத்தை மிகவும் அன்பாக கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து இந்த தேர்தலில் இருந்து விலகுங்கள். எனது கோரிக்கையை அவர் தவறாக புரிந்துகொள்ள மாட்டார். நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக, ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் யாருடைய வெற்றி எமக்கு சாதகமாக இருக்கும், யாருடைய வெற்றி எமக்கு பாதகமாக இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.