கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் செயலாளரை இடமாற்றம் செய்யுமாறும் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ம.பற்றிக்நிரஞ்சனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த மாதம் 17 ஆம் திகதியிடப்பட்டு வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது பூநகரி பிரதேச சபையின் செயலாளர் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து
பணியாற்றும் மனப்பாங்கு அற்றவர், அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் எந்தவொரு கருத்திட்டமோ, முன்மொழிவோ செயலாளர் தயாரிக்கவில்லை என்றும்,அவர் மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என மேலும் பல காரணங்களை சுட்டிக்காட்டி செயலாளரை இடமாற்ற வேண்டும் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பூநகரி பிரதேச சபையின் செயலாளரை தொடர்பு கொண்டு வினவிய போது ஒரு அரச உத்தியோகத்தரான நான் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு செயற்பட வேண்டும் அந்த வகையில் உள்ளுராட்சி சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு பூநகரி பிரதேச சபையின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லும்
வகையில் எனது பணிகளை மேற்கொண்டு வருகின்றேன். சபையில் உள்ள பணியாளர்களையும் அவர்களது கடமைகளை சட்டத்திட்டங்களுக்கு அமைவாக மேற்கொள்ளவே வழிநடத்தி வருகின்றேன். ஆனால் தனிநபர் விருப்பு வெறுப்புக்களுக்கு அமைவாக செயற்படுவதற்கு எமக்கு சட்டம் ஒரு போதும் இடமளிக்காது. எனத் தெரிவித்த அவர் தனது இடமாற்றம் கோரிக்கை தொடர்பில் எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்டார்.