டெங்கு,கொரோனா உறுதிசெய்யப்பட்ட நோயாளி அடையாளம் காணப்பட்டார்!

டெங்கு நோயும் கொரோனா தொற்றும் உறுதிசெய்யப்பட்ட நோயாளி ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 2ம் திகதி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு முதலில் டெங்கு நோய் பீடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றும் இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டது.

29 வயதான அவர் தற்போது ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவருடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் தங்கியிருந்த ஏனைய நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் யாருக்கும் கொரோனா தொற்று இருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளதாக எமது செய்திப் பிரிவிற்கு அவர் குறிப்பிட்டார்.