அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு புதிய தலைவராக அநுர பிரியதர்ஷன யாப்பா நியமனம்!

6
6

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டார்.

இன்றையதினம் (09) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழு இது தொடர்பான தீர்மானத்தை எடுத்தது.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக அநுர பிரியதர்ஷன யாப்பாவின் பெயரை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன முன்மொழிந்ததுடன், ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா அதனை வழிமொழிந்தார்.

தலைவர் நியமனத்தைத் தொடர்ந்து அரசாங்க நிதி பற்றிய குழுவின் எதிர்கால செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதுடன், 2020 நிதியாண்டின் நிதிஒதுக்கீட்டுச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.