யாழ்.செம்மணியில் – ஏ9 வீதியை இணைக்கும் நல்லூர் வளைவு பாதையை திறக்க கோரிக்கை!

யாழ்.செம்மணியில் – ஏ9 வீதியை இணைக்கும் நல்லூர் வளைவு பாதையை திறக்க யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

நல்லூர் ஆலயத்தின் வரலாற்றையும் கலை கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் செம்மணியில் – ஏ9 வீதியை இணைக்கும் பகுதியில் நல்லூர் வளைவு அமைக்கப்பட்டு வரும் நிலையில் நீண்ட நாட்களாக இந்த வேலைப்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படாது ஒருபகுதி வீதி மூடப்பட்டுள்ளது.

கட்டுமானத்திற்காக அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீதி மழை காரணமாக சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் இந்த வீதியால் பயணிப்போர் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.

நல்லூர் பிரதேச சபை உரிய நடவடிக்கை எடுக்குமாறு பலரும் கோரியுள்ளனர். கடந்த அரசில் இந்த வளைவு கட்ட விஜயகலா மகேஸ்வரன் 6 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்திருந்தார்.

மூடப்பட்டுள்ள வீதியை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தனது முகப்புத்தகம் வாயிலாக கோரியுள்ளார்.