அம்பிளாந்துறையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறையில் இன்று (14) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மட்டக்களப்பு, மண்டூர் பலாச்சோலை, மயான வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சு.பரணிதரன் என்னும் 37வயது குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

இன்று காலை தீபாவளி தினத்தில் வெலிக்கந்தையில் இருக்கும் வயலுக்கு சென்றுகொண்டிருக்கும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அம்பிளாந்துறை – வெல்லாவெளி வீதியில் தாமரைப்பூ சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றபோது வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் மின்சார தூணில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது குறித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதேநேரம் குறித்த நபருடன் இன்னுமொருவர் பயணித்துள்ளதாகவும் விபத்து நடைபெற்ற நிலையில் குறித்த நபர் காணாமல் போயுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.