ஹாட்லி மைந்தர்களின் 21ஆவது நினைவேந்தல்!

5 1
5 1

ஹாட்லி மைந்தர்களது 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் வடமராட்சி, இன்பர்சிட்டி கடற்கரையில் அவர்களது குடும்பத்தவர் மற்றும் நண்பர்களால் உணர்வுபூர்வமாக இன்று கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

கல்விச் செயற்பாட்டின் நிமித்தம் இன்பர்சிட்டி கடற்பகுதியில் 1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி, கடல்வள ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவேளை கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்திருந்த பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் 2000ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு விஞ்ஞானபீட மாணவர்கள் நான்கு பேரின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல்பீட மாணவனாகக் கல்வி கற்று வந்தவேளை ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவனது 16ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 9.00 மணியளவில் இன்பர்சிட்டி கடற்கரையில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

1999ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் திகதி கடலோடு கடலாகச் சங்கமித்திருந்த பூரணமூர்த்தி கந்தர்வன், சிவநாதன இரவிசங்கர், சுந்தரலிங்கம் சிவோத்தமன் மற்றும் பாலகிருஸ்ணன் பிரதீபன் ஆகியோருடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல்பீட மாணவனாக இருந்தபோது 2004ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் சிக்கிச் சாவடைந்திருந்த மரியரட்ணம் குணரட்ணம் ஆகியோரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றிணைந்து இந்த நினைவேந்தல் நிகழ்வை நடத்தியுள்ளார்கள்.

குறித்த மாணவர்களது திருவுருவப்படம் வைக்கப்பட்டு அவர்களுக்கு விருப்பமான உணவு வகைகள் படையலிட்டு மேற்கொள்ளப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மலர் தூவி, சுடரேற்றி நினைவு வணக்கம் செலுத்தினார்கள்.

இறுதியில் படையல் பொருட்கள் மற்றும் மாலை, பூக்கள் என்பன மாணவர்களின் ஆன்மா இரண்டறக் கலந்திருக்கும் இன்பர்சிட்டிக் கடலில் கலக்கப்பட்டது.

இதேவேளை, இம்மாணவர்களது நினைவாக குருதிக்கொடை முகாம் எதிர்வரும் சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஹாட்லிக் கல்லூரியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய கொரோனாத் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக குருதிக் கொடை முகாமை நடத்த பணிக்கப்பட்டுள்ளதால் குருதிக்கொடை வழங்க விரும்பும் தன்னார்வலர்கள் தங்கள் விபரங்களை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.